திங்கள், 8 பிப்ரவரி, 2016

நான் ருத்ரா இ.பரமசிவன்.







நான் ருத்ரா இ.பரமசிவன்.

நெல்லை தாமிரபரணிக்கரையில் கல்லிடைக்குறிச்சி என் பிறந்த ஊர்.
01.06.1943 ல் பிறந்தேன்.தற்போது மதுரை "கற்பக ந‌கரில்" வசிக்கிறேன்.மதுரை எல்.ஐ.சி யில் ஆஃபீசராய் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.என் துணைவியார் பி.எஸ்.என்.எல்.லில் அதிகாரியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பிள்ளகள் இருவர். (ஆண்+பெண்) அவர்களும் பேரன் பேத்திகளும் அமெரிக்கா கலிஃபோர்னியாவில் உள்ளனர்.எனக்கு வலைப்பூவில் கவிதைகள் எழுதுவது மட்டுமே தொழில்.நான் 1969லிருந்து எழுதி வருகிறேன்.(செம்மலர் கல்கி ஜூனியர் விகடன் குங்குமம்...) 2000க்கு பிறகு வலைப்பூ எழுத்தாளன்.எனக்கு கணிதப்பாடங்கள் (டோபாலஜி காம்ப்லெக் ஸ் அனாலிசிஸ்..மற்றும் குவாண்டம் மெகானிக்ஸ் ஸ்ட்ரிங்க் தியரி கோட்பாடுகள் பற்றி படிப்பதும் எழுதுவதும் மிகவும் பிடிக்கும்.

வலைப்பூ மற்றும் கூகிள் குழும நண்பர்கள் (மின் தமிழ்,வல்லமை
முதலிய மின்மடல்கள்) எனக்கு பிரியமானவர்கள்.

உங்கள் பார்வையும் கருத்துகளுமே என் அன்றாட ஆகாரம்.

வணக்கம்

அன்புடன் ருத்ரா

தாமிரபரணி எனும் புத்தகம் .





தாமிரபரணி  எனும் புத்தகம் .
===============================================ருத்ரா இ.பரமசிவன்.

உன்னை நதி என்பர்கள்
வெறும் "ஹெச்.டூ.ஓ" என்று
வகுப்பில் படித்ததை ஒப்பிப்பார்கள்.
நீ எங்கள் உயிர்.
நீ எங்கள் காதல்.
ஒரு காதலனுக்கு காதலி.
ஒரு காதலிக்கு காதலனின் பளிங்கு முகம்.
அகத்தியன் கமண்டலத்திற்கும்
முன்னே
உதித்த ஒரு தமிழ் மண்டலத்தின்
தண்ணொளி நீ .
எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சியில்
பத்தமடைப்பாய் போல் தான்
விரித்துக கிடப்பாய்.
அந்த பட்டு சுகத்தில்
புரண்டவர்கள்
அந்த சொர்க்கங்க்களையெல்லாம்
தூ வென்று துப்பி விடுவார்கள்.
தாமிர பரணி எனும் புத்தகத்தைப்புரட்டினால்
திலகர் வித்தியாலய உயர்நிலைப்பள்ளியின்
ஏழாம் வகுப்பில் ஒரு நாள்
ஆசிரியர் என்னை வகுப்பின் முதல் மாணவனாக
என் விடைத்தாளை உயர்த்திக்காட்டி
எனக்கு மகுடம் சூட்டியதை
என்னால் மறக்கவே முடியாது!
ஐன்ஸ்ட்டின் நோபல் பரிசு அது எனக்கு.
உன் நீர்ப்பிம்பத்தில்
அதை உற்றுப்பார்த்து உவகை கொள்வேன்.

உன்னில் தோய்ந்து குளிக்க வருமுன்
அந்த மானேந்தியப்பர் கோவில்
மதில் சுவர் வழியே தான் வருவோம்.
எங்கள் தலைக்கு மேலே
சுர புன்னை மரத்தின்
இனிப்பு முத்துக்கள் எனும்
மொட்டுக்கள்
கீழே இறைந்து கிடக்கும்
அவற்றை வாயில் போட்டு
உன்னை அசை போடுவோம்.
கலிஃபோர்னியாவின் கடற்கரை
நீர் விளிம்பில்
கால் நனைத்த போதும்
அந்த கடற்குருகுகளின் கூர் அலகுகள்
எதோ ஒரு கோகோகோலா குப்பிக்குள்
குடைந்து கொண்டிருந்த போதும்
உன்னைக் குடைந்து குடைந்து
தலை நீட்டும்
அந்த நீர்க் காக்கைகளின்
கருப்புச்சிறகு "நந்தலாலா"க்களிடமே
மனம் பிசைந்து நிற்கும்!
கங்கை காவிரி போல்
நீ ஒரு ரத்னக்கம்பளம் இல்லை தான்.
ஆனால்
எங்கள் ரத்தம்.
எங்கள் இதயங்களின் மெல்லிய சத்தம்.

========================================================